தற்போதைய நவ நாகரிக சமூகத்தில் பங்கு கொள்ளும் இளைஞர்களின் வாய் வார்த்தைகளில் தவிர்க்க முடியாத சொல்லாடலாக வழங்கி வருகிறது ‘morattu single’ என்னும் பதங்கள். அதனை பற்றிய எனது எண்ணங்களை, இதுவரையில் என் வாழ்வில் பெற்ற அறிவையும் அனுபவத்தையும் ஆதாரமாகக் கொண்டு, உங்களோடு உரையாடுகிறேன்.
இக்கட்டுரையில் முழுக்க முழுக்க ஒரு ஆணின் பார்வையே சொல்லப்பட்டிருக்கும் என்பதையும் தெளிய வைத்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
‘நானெல்லாம் பொண்ணுங்க கிட்ட பேசவே மாட்டேன்’ என்றும் ‘பொண்ணப் பாத்தா மண்ணப் பாக்குற வகை’ என்றும் தற்புகழ்ச்சியாகக் கூறிக்கொண்டு திரிவது பேஷன் ஆகி விட்டது. உண்மையில் பெண்களிடம் சகஜமாக பேசும் சிலரும் அதனை மறைத்து, தாங்களும் ‘morattu single’கள் தாம் என மார்தட்டிக்கொள்கிறார்கள். ஆராய்ந்து பார்க்கையில் இது பெருமைப்படக் கூடிய ஒன்றாக தெரியவில்லை.
இவ்வாறு கூறுபவர்கள் இரண்டு விதத்தவர்கள். தாங்கள் படிக்கும் பள்ளிக் கல்லூரியில் சக-மாணவிகளிடமோ, பணியிடங்களில் சகப் பெண் பணியாளர்களிடமோ சகஜமாக பேசும் துணிவினை அற்றவர்களாக ஒரு சாரார் இருக்கிறார்கள். இவர்கள் தங்களின் துணிவற்ற இயலாமை நிலையை மறைக்க ‘morattu single’ என்னும் அர்த்தமற்ற பெருமையை பூசிக்கொள்கிறார்கள்.
இன்னொரு சாரார், துணிவு இருந்தும் இல்லாமல் போனாலும் அதனை சட்டை செய்யாமல் தங்களை பெண்களிடம் இருந்து தனிமைப் படுத்திக் கொள்பவர்கள். இவர்கள் ‘morattu single’லாக இருப்பதை ஏதோ உயரிய தன்மையென தாங்களாகவே கருதிக்கொண்டு, தங்களின் ஹார்மோன் செய்யத் தூண்டுவதையுமே துச்சம் செய்பவர்கள்.
இவ்விரு சாராரின் மனநிலையும் ஒன்று தான்; அது பெண்களை தம்மைப் போன்ற ஒரு சக மனிதியாக காணாமல் அவர்களை ஏதோ வேற்று உலக வாசிகளைப் போல் எண்ணிக்கொள்வது. இந்த மனநிலையே சக ஆணிடம், முன்பின் அறியாதவராயினும், சகஜமாக உரையாட முடிந்தவர்களைக் கூட ஒரு பெண்ணை அணுகும்போது தயக்கம் கொள்ள செய்கிறது; துணிவற்று போக செய்கிறது.
இத்தகைய மனநிலை ஆண்களிடம் வருவதற்கு குடும்பத்தினரும், படிக்கும் பள்ளியும், சமூகமும் வழி வகுக்கிறது; சினிமா இதற்கு ஒன்றும் விதி விலக்கல்ல! ஒரு ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையில் தோன்றும் நட்பையும் காதலையும் தனித் தனியே பிரித்து அணுகத் தவறின; உணர்வுகளை romanticize செய்தன.
சில co-ed பள்ளிகளில் ஆண்-பெண் பேசிக்கொள்ளக் கூடாது, மீறினால் தண்டனை! சில கல்லூரிகளிலும் அதே நிலை. இவ்வாறு இருப்பின் மனிதன் தனது இயல்பான பாலியல் உணர்வுகளில் இருந்து வேறுபட்டு போகவும் வாய்ப்புண்டு - அது சமுகத்திற்கு தீமையாக முடியலாம்.
நட்பு செய்ய அச்சம் கொள்கிறார்கள். ஆரம்பத்தில் நட்பாக பழகி பிறகு அது காதலாக மாறிவிடுமோ என்று அஞ்சுகிறார்கள். அது காதலின் பரிணாமவளர்ச்சி என்பதை அவர்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.
காதல் வாழ்வில் அன்பவிக்கக் கூடாத ஒன்றா என்ன! உலகில் எல்லா மனித உயிரும் மற்றொரு உயிரடத்தில் காதல் கொண்டுள்ளது என்பதை மறுக்க முடியுமா? நாம் வழங்கும் பெயர்கள் தாம் மாறுகின்றனவே தவிர உணர்வு ஒன்று தான்.
மனிதர்களுக்குள் காதல் வளர வேண்டும், அதுவே சாதி, மதம், மொழி, பால், வர்க்கம் என்ற வேறுபாடுகளைக் களைந்து நாடுகளைத் தாண்டிய ஒற்றுமையை வழி வகுக்கும்.
அப்படிப் பார்த்தால், தங்களை morattu single என்று கூறிக்கொள்பவர்கள், காதலுக்கு உடன்பட மறுப்பவர்கள் என்றே தோன்ற வைக்கிறது. காதலுக்கு தலை சாய்க்காத இவர்கள் ஒரு ஆணாதிக்க சிந்தனை நிறைந்து இருப்பதற்கும், மற்றைய பாகுபாடுகளுக்கு துணைபோகும் பிற்போக்குத்தனமானவர்களாக இருப்பதற்கும் வாய்புகள் மிகவும் அதிகம்.
Arranged marriage system இவர்களைப் போன்றவர்களுக்கு தீனி போட்டு, சாதிக் கட்டமைப்பினை உடையாமல் கட்டிக் காத்துக்கொள்கிறது.
முன்னரே சொல்லியபடி இவர்களால் சக மனிதிகளை சக உயிராக பாவிக்க முடியாது; தேவைப்படும்போது பெண்களை தேவதை நிலைக்கும், தெய்வ நிலைக்கும் உயர்த்திக் கூறுவார்கள்; மற்ற சமயங்களில் தங்களுக்கு அடிமை வேலை செய்ய நிர்பந்திப்பர்கள். அவர்களின் சுய மரியாதையில், கண்ணியத்தில் தங்களின் மூக்கை நுழைப்பார்கள், கால் கை எல்லாமும்கூட நீட்டுவார்கள்.
சுருங்கக் கூறினால், ‘morattu single-ness’ என்பது சமூகத்தின் ஆண்களை பெண்களிடம் சகஜமாக பழக விடாமல், அவர்களின் உணர்வுகளை அறிய விடாமல், தங்களை misogynistகளாகவே இறுதி வரையிலும் தொடர வழி வகுக்கும் ஒரு மனநோய். சாதி கட்டமைப்பில் இருந்து வெளியேற முடியாத பின் விளைவினைக் கொடுக்கும் ஒரு சமூக நோய். அதற்கு காதலே மருந்து.
காதல் சிறகினை உலகினில் விரிப்போம்!! பாகுபாடற்ற வானில் பறப்போம்!!
இன்பரசு தமிழ்மகன்
அருமை...சமூச்திற்கு கூற வந்த விசயத்தை தெளிவாகவும் புரியும்படியும் கூறியுள்ளீர்கள்...நன்றி
ReplyDelete